புதன், 20 ஏப்ரல், 2011

நட்புக்காக
































என்னை
சொந்தம்
கொண்டாடியபோதுதான்
உணர்ந்துகொண்டேன்
எனக்கு
இன்னொரு தாய்
நீ என்று







































தேர்தல்

பணம்
கொடுத்தால்
இங்கு
பாவிகளும் கடவுளாய்
நடமாடலாம்.....

கிடைக்காத விடிவு

வெந்துபோகும்
வாழ்க்கையில் பணம்
வேசம் போட்டு
நாடகமாடுகிறது........


ஈரமில்லாத
மனங்களில் ஜனநாயகம்
தோற்கடிக்கப்பட்டு
நெஞ்சுவர்களில் மட்டும்
சுலோகமாயிருக்கிறது...


நிம்மதியை
தொலைத்த
அகதிப்பிஞ்சுகளின் கல்வியும்
கொடுக்கமுடியாத
கடனாகிப்போனது......


தாயையே
முதியோர் இல்லத்துக்கு
அனுப்பும் பிரபஞ்சத்தில்
அன்பும் அநாதையாகிப்போனது...


சரித்திரங்களை

படைத்திடும் மனிதர் நடுவே
ஏனோ சாதி மட்டும்
தூரநிற்கிறது...


கடவுளே
மரணத்தை விட
கொடுமையானது
மனித மனங்கள்,,,

தொலைந்தநிம்மதி

நிஜங்கள்
பறிக்கப்பட்டு
பொம்மைகளாய்
நடமாடுகிறது-மனிதம்


பொருளாதாரம்
முதலாளித்துவம் பேசி
ஏழைகளுக்கு
வழங்குகிறது-மரணப்பரிசு


காலம்
பிரபஞ்சத்தை கடத்திச்செல்ல
நிர்வாண அசிங்கமாகிறது
கலாசாரம்



நிம்மதி 
தொலைந்த உறவில்
விம்மி அழுது போகிறது
பெண்ணியம்


யுத்தம்
முடிந்தும் சுதந்திரம்
இல்லாத மனிதர்களாய்
இங்கு-தமிழினம்

ஏக்கங்கள்

என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத ஜனநாயகவாதிகள்
கண்ணீரை சொந்தமாக்கி
கல்லறையில் சமாதியானவர்கள்
கணக்கிட்டால் பல லட்சம்...


சொத்துக்களை இழந்து
 சொந்தங்களைதொலைத்து
சோற்றுக்கு வழியேது-சொல்லப்போனால்
சோர்ந்துபோனது எம் உள்ளமும்தான்
இருப்பதற்கு வீடேது
இளைப்பாற இருக்கையேது
மரநிழலில் வாழ்கிறோம்


மரண அச்சுருத்தலும்
மரணஓலங்களும்
மண்ணில்நிரந்தர சோகங்கள்தான்
விருவிருப்பாய் வீசப்படும் செல்வீச்சுக்களும்
சவக்குழியே ஞாபகப்படுத்துகிறது
என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத இன்றைய நிலை........

நிறைவேறாத ஆசை

மாறிக்கொள்ள
 முடியாமல்போனது
வறுமையின் மறுபதிப்புக்கள் 



மனதில்
மறைந்துபோகாமல்
மெளன அஞ்சலி பிரார்த்தனை
இடம்பெறுகிறது
சமாதானத்தை பெற்றெடுப்பதற்கென்று


சாவுடன்
இங்கு ஆவிகள்
உரையாடல் செய்கிறது
ஆர்ப்பாட்டம் புரிய இங்கு
ஆட்கள் இல்லையென்று


இடப்பெயர்வுகள்
அகதிவருகை
நிவாரணவரிசை மிளவும்
எம் வீதிகளில் தொகுப்பிக்கப்படுகிறது


எமக்கு
சமாதானகாற்றை அரவணைக்க
முடியவில்லையே மனிதனாக பிறந்தும்....

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இறுதித்தீர்ப்பு

படிக்கின்ற வயதை
யுத்தமதில் தொலைத்து
படிக்காமலே பட்டம் எடுத்தேன்
அகதி என்று


பாசத்தைஅனுபவிக்கையில்
பந்தங்களை இழந்து
தனிமையில் சோர்வு பட்டேன்
அநாதை என்று


இளமையை ரசிக்கையில்
இனந்தெரியாமல் பிடிபட்டு
இரக்கமில்லாமல் 
அவஸ்தைப்படுகின்றேன்
குற்றவாளி என்று


கனவுகளை நினைக்கையில்
கண்ணீரைப்பெற்று
குருதிபடிந்த நினைவுகளை சுமக்கின்றேன்
வேற்றினத்தான் என்று


இன்னொரு நரகத்தை
இனியும் அனுபவிக்கமுடியாது
கடவுளே-தீர்ப்பை
மாற்றி எழுதும்....தமிழனுக்கென்று

முகவரித்தேடல்

என்
குருதித்துணிக்கைகளில் புகுந்து
இதயத்தில் குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறாய்
கனவுகள்
கண்ணீரில் மூர்ச்சையானபோதும்
நிழலும் உன்னிடம் வருவதற்கு
அடம்பிடிக்கிறது
சோகங்கள்
தந்துதூரமாகிப்போகும்
உன்
முகவரிதான்
கவிதை எழுதச்செய்கிறது
பலருடன்
உன்னைப்பற்றிப்பேசினேன்
ஒருதுளிவார்த்தையேனும்
உன்னிடம் சொல்லவில்லையே
அன்பே.....
நான் உன்னில் பிடிவாதமாய்
இருப்பதே உன்னில் பித்தனாயிருப்பதால்தான்

திங்கள், 18 ஏப்ரல், 2011

நியாயம்

மனமே
உன் மெளனத்தை
எனக்கே விற்றுவிடு
நீண்டநாள்
முகவராய் நானிருக்கின்றேன்
நீ விரும்புபவனை விட......



தாய்முகம்

நான்
உன்னைப்பார்த்ததில்லை
ஆனாலும் தினமும்
பார்க்கிறேன்-நிலைக்கண்ணாடியில்
என் ஜாடைஎன்று
சிலர் சொல்வதைக்கேட்டு...

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சிகரெட்

மரண அறிவித்தலை
பெட்டியில் எழுதி விட்டு
தூங்கிக்கொண்டிருக்கிறான்
வெள்ளைமனிதன்


மணமாலை


நாம்
இப்போழுது
சந்தைப் பொருளாய்
காட்சிப்படுத்தபடுகிறோம்
யாரிடம்
விலைபோவோம் என்கின்ற
ஏக்கத்திலே....

வேதனைப்பூக்கள்

எனக்கு 
தனிமை பிடிக்கவில்லை-இருந்தும்
மரத்தூன்களைஎண்ணி ஆயுல் கைதியானேன்


உணர்ச்சிகளை
உலைக்களத்தில் வேகவைத்து
விழிகள் ஏனோ நாகரிகபொம்மைகளையே
மேய்கிறது


சமுகத்தின் சட்டத்துக்கும்
சொந்தத்தின் மரபுக்கும்
குடும்பத்தின் பழக்கத்துக்கும் சிறைவாசம் 
செய்கின்றேன்


யாப்பில் ஏனோ
பேச்சுரிமை ஆனாலும் பேசாமடந்தையாகவே
மெளனங்களை தொண்டக்குழிவரை
சுமக்கின்றேன்


எதிர்காலத்தை
சிந்திக்கவே முடியாத ஏழைபிறப்புக்கு
தெரிந்ததெல்லாம் வாசனையில்லாத
குடிசை அறைதான்


அடுப்பங்கறை
தொட்டு படுக்கையறை மட்டும்தொடரும்
நகர்வுகளில்
முற்றத்து மலர்களை கண்டது
சில நாட்களேதான்


என் சோகங்களை
சொல்வதற்கு ஒருவருமில்லை
தென்றல் காற்றையாவது
திசைதிருப்புங்கள்


சிறைவாசம் அனுபவித்து 
சீதனத்துக்கு சில்லறையில்லாமலே
மரணித்துவிடுகின்றேன் -இன்னொரு
உலகத்திலாவது சுதந்திரம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்.....

தொலைபேசி

உன் செல்நம்பரை சேமிப்பாக்கி உன்
மொழியை -என்
செவிகளுக்கு அடைக்கலமாக்கினேன்

இரவுகளில்
நினைவுகளை நிர்மூலமாக்கி
கனவுக்கு ஓய்வு கொடுத்து
காதோரம் வார்த்தைகளை
மொழிபெயர்த்தேன்

உன்
அழைப்புக்காக காத்திருந்து
மனம் வெந்து
நம்பர் சுழற்றி வீங்கிப்போனது
என் விரல்கள்

உன் முன்னால்
காட்டமுடியாத முகபாவணையை
தனியாக காட்டி வீரம்
பேசுகின்றேன்

தாஜ்மஹாலை
கூட புறம் தள்ளிவிட்டு-என்
காதல் சின்னமானது
கையடக்கத் தொலைப்பேசி

என்
பிறந்ததினத்தை மறந்து போனாலும் உன் செல்நம்பரை
மறக்கமுடியவில்லையே
இருந்தும்
தோற்றுப்போனது என் வாழ்வு

காதலுடன் இணைந்து...

கண்ணீர்க்கணங்கள்

நெருப்பில்
வேகின்றது வறுமைஉணர்வுகள்
கூடவே வடிகட்டிஎடுக்கப்படுகிறது
வம்சச்சாம்பாரில் ஏழையின் கண்ணீர்

பணம்
மனத்தை மணமுடித்து
சவக்குழிகளுக்கு அலங்காரம்
செய்கிறது

ஒப்பாரி ராகத்தில்
சந்தோசத்தை காணத்துடித்து
தமிழனின் தலைவிதி
மாறிப்போனது

முதலாளித்துவம்
பிரபஞ்சத்தை விலைக்குபேசி
அடக்குமுறையை திணிக்க முயலுகிறது

பொம்மை
கலாசாரத்தில் பெண்ணியம் அடிபணிந்து
விற்பனையாகிறது
இருந்தும்
தொடரும் தவிப்புக்களில்
அழுது புலம்புகிறது
மனித மனங்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சுதந்திரம்

இவர்களால் என்
உயிரைத்தான் பறிக்கமுடிந்தது
எழுத்துக்களை கைது செய்யமுடியவில்லை...........